தொண்டு நிறுவனங்கள் அப்படி என்ன தவறை செய்து விட்டன ?

மத்திய உளவுத்துறையின் அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒரு சில தினங்களுக்குள், அது மத்திய உள்துறை அமைச்சரின் கைகளில் சேர்வதற்குள், ஊடகங்களில் வந்துள்ளதை, இயல்பான விவகாரமாக பார்க்க இயலாது. அதுவும், மத்திய உளவுத்துறையின் அறிக்கையின் ஒரு சில பத்திகள், 2006ம் ஆண்டு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தொடர்பாக மோடி பேசிய பேச்சின் சில பகுதிகளை அப்படியே கொண்டுள்ளதில் இருந்தே, இந்த அறிக்கை வெளியான பின்னணியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
9, செப்டம்பர் 2006ம் ஆண்டு, டெல்லியில் ஒரு புத்தகம் வெளியிடப்படுகிறது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் நிதி என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய மோடி, பின்வருமாறு பேசினார்.
“They hire PR firms to continually build their image” with “money coming from abroad.”
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான கூட்டமைப்பின் தலைவரான எஸ்.பி.உதயக்குமாருக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருகிறது என்று, முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, ஒவ்வொரு முறை சென்னை வருகையிலும் பேட்டியளித்தார். ஒரு முறை, மன் மோகன் சிங்கே கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கு, வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக ஸ்கான்டினேவிய மற்றும் அமெரிக்காவிலிருந்து நிதி உதவி வருவதாக குறிப்பிட்டார். மன்மோகன் சிங் கட்டுப்பாட்டில், வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு, மத்திய புலனாய்வுத் துறை, மத்திய உளவுத்துறை, ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நிறுவனம், வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் மேலும் பல்வேறு நிறுவனங்கள் இருந்தன. உதயக்குமாருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி உதவி வந்திருந்தால், மன்மோகன் சிங்கின் கட்டுப்பாட்டில் இருந்த அத்தனை புலனாய்வு நிறுவனங்களின் மூலமாகவும், மிக மிக எளிதாக கண்டுபிடித்திருக்க முடியும். எஸ்.பி.உதயக்குமார், நேரடியாக மன்மோகன் சிங்குக்கே வழக்கறிஞர் அறிவிக்கை அனுப்பினார். ஆனால், இறுதி வரை, மன்மோகன் சிங்காலோ, அவரது அரசாலோ, ஒரு துளி ஆதாரத்தைக் கூட அளிக்கவோ, உதயக்குமார் மீது நிதி மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்யவோ இயலவில்லை.
இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அப்படி என்ன தவறை செய்து விட்டன ? மரபணு மாற்று கத்தரிக்காய் மற்றும் இதர பயிர்களை பரிசோதனை முறையில், இந்தியாவில பயிரிட அனுமதிக்காமல் தடுத்தன. நர்மதா அணையின் உயரத்தால் இடம் பெயர்ந்திருக்க வேண்டிய இரண்டரை லட்சம் மக்களை இத்தனை ஆண்டுகளாக இடம் பெயர விடாமல் தடுத்தன. கூடங்குளம் போன்ற அணு உலைகளால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களை மக்களிடம் எடுத்துரைத்தன. பாஸ்கோ, வேதாந்தா போன்ற இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் நிறுவனங்களின் லாப வெறியை அம்பலப்படுத்தின. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விவசாய விளை நிலங்களை அபகரிப்பதற்கு எதிராக போராடியிருக்கிறார்கள். இதை வெளிநாட்டில் நிதி பெற்று செய்தால் என்ன ? உள்நாட்டில் நிதி பெற்று செய்தால் என்ன ?
நாஜிக்கள் கோயபல்ஸை பயன்படுத்தி எப்படி தங்கள் கொள்கைகளை அமல்படுத்தினார்களோ, அதே போல இனிப்பு தடவி, விஷத்தை ஊட்ட மோடி அரசு முயன்று வருகிறது. இது மோடி அரசு, வெகுஜன மக்களின் மேல் தொடுத்திருக்கும் முதல் தாக்குதல்.

0 Comment "தொண்டு நிறுவனங்கள் அப்படி என்ன தவறை செய்து விட்டன ?"

Post a Comment