கோப்பை வெல்ல என்ன காரணம்: சொல்கிறார் காம்பிர்

கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் கூறியது: ஐ.பி.எல்., தொடரில் இரண்டாவது முறையாக கோப்பை வென்றது மகிழ்ச்சி. வீரர்கள் ஏலத்தின் போது, சிறந்த பவுலர்களை தேர்வு செய்ய முடிவு செய்தோம். நிறைய அணிகள் பேட்டிங் வரிசையை பலப்படுத்த, சிறந்த பேட்ஸ்மேன்களை தேர்வு செய்தன. ஆனால் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கும் பட்சத்தில், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற காரணத்தினால், பவுலர்களை தேர்வு செய்ய முன்னுரிமை கொடுத்தோம். பேட்டிங், பவுலிங்கில் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தியதன் மூலம், 2வது முறையாக கோப்பை வெல்ல முடிந்தது.      
கடந்த 2012ல் கோப்பை வென்றதை, இம்முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதோடு ஒப்பிட  முடியாது. முதல் ஏழு போட்டிகளுக்கு பின், கோல்கட்டாவின் ‘பிளே–ஆப்’ வாய்ப்பு குறித்து சந்தேகம் எழுந்தது. அதன்பின் தொடர்ச்சியாக ஒன்பது போட்டியில் வெற்றி பெற்று கோப்பை வென்றது உற்சாகமாக உள்ளது.      
வீரர்கள் ஏலத்தில், மனிஷ் பாண்டே மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்தோம். இவரது ‘பார்ம்’ குறித்து சந்தேகம் எழுந்ததால், நிறைய அணிகள் இவரை தேர்வு செய்ய முன்வரவில்லை. ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இவர், கோல்கட்டா அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார்.      
இம்முறை துவக்கம் எனக்கு சரியானதாக அமையவில்லை. முதல் மூன்று போட்டியில் ‘டக்–அவுட்’ ஆனது ஏமாற்றம் அளித்தது. ஒரு தொடரை எப்படி துவங்குகிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி முடிக்கிறோம் என்பதை தான் பார்க்க வேண்டும்.      

0 Comment "கோப்பை வெல்ல என்ன காரணம்: சொல்கிறார் காம்பிர்"

Post a Comment